திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.135 திருப்பராய்த்துறை
பண் - மேகராகக்குறிஞ்சி
நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
    கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
    ஆறுசேர்சடை அண்ணலே.
1
கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
    வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
    அந்தமில்ல அடிகளே.
2
வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
    தோதநின்ற ஒருவனார்
பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை
    ஆதியாய அடிகளே.
3
தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
    நூலுந்தாமணி மார்பினர்
பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை
    ஆலநீழல் அடிகளே.
4
விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
    இரவில்நின்றெரி யாடுவர்
பரவினாரவர் வேதம்பராய்த்துறை
    அரவமார்த்த அடிகளே.
5
மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
    கறைகொள்கண்ட முடையவர்
பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
    அடையநின்ற அடிகளே.
6
விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
    சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
    அடையநின்ற அடிகளே.
7
தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
    நெருக்கினார்விர ரொன்றினால்
பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
    அருக்கன்றன்னை அடிகளே.
8
நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
    தோற்றமும் மறியாதவர்
பாற்றினார்வினை யானபராய்த்துறை
    ஆற்றல்மிக்க அடிகளே.
9
திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்
    உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலாலெயில் எய்துபராய்த்துறை
    மருவினான்றனை வாழ்த்துமே.
10
செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
    செல்வர்மேற் சிதையாதன
செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்
    செல்வமாமிவை செப்பவே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com